அட்சய பாத்திரமும் அபார்ட்மென்டும்
கத்தரியும்
பீர்க்கையும்
புடலையும்
கொத்துக் கொத்தாய்
காய்த்துக் குலுங்கும்
தாத்தாவின்
தோட்டமெனும் அட்சயபாத்திரம்
மத்தியான இடைவெளியில்
சோற்றுக் கும்பாக்களால்
களை கட்டும்
கிணற்றடி மோட்டார் ரூம்
தோட்டம் சுற்றி
வரப்போரம் அணை கட்டும்
ஆமணக்கும்
மஞ்சநத்தியும்
தப்பி முளைத்த
தண்டுக்கீரைச் செடிகள்
ஊசி நுழையும் இடைவெளியில்
ஊடுருவும் பிரண்டைக் கொடிகள்
மடி நிறைய அவரைக்காயும்
தூக்கு நிறைய தக்காளியும்
கண் காணக் கிடைப்பதில்லை
இன்றைய சாயங்காலப் பொழுதுகள் ,
இதுவும் ஒரு காலம் !
இப்படியும் பொழுதுகள் கழியலாம்
தாத்தாவும்
இன்றில்லை
அட்சய பாத்திரமும்
இங்கில்லை
இருப்பதெல்லாம்
கம்பீரமான
அபார்ட்மென்ட் மட்டுமே
லேசாய் மிக லேசாய்
மனம் வலித்தாலும்
நானும் அங்கே
குடியிருப்பதால்
பாழும் நினைவுகள்
மட்டும்
நீங்காமல் நெஞ்சோடு ...!!!
கயல்
0 comments:
Post a Comment