நிறப்பிரிகை

கதைகளுக்கும் ,கவிதைகளுக்கும் கூட நிறம் உண்டு என்பது என் நம்பிக்கை ;ஒவ்வொருகதையும் ,கவிதையுமே கூட ஏதோ ஒரு நிறத்தைப் பிரதிபலிக்கிறது என்பது நிஜம் ,எட்டாங்கிளாசில் ஹிஸ்டரி வாத்தியார் மேப் குறிக்கும் போது கடலுக்கு நீல நிறம் , நிலம் அல்லது தரைக்கு பிரவுன் நிறம் காடுகளுக்குப் பச்சை நிறம் என்று சொல்லித் தந்ததைப் போல கவிதைக்கும் நிறம் கண்டு பிடித்துக் குறிப்பிட்டால் சுவாரஷ்யமாக இருக்குமே என்று தோன்றியது ...இதோ சின்னதாக ஒரு முதல் முயற்சி ...

Monday, October 20, 2008

சைக்கிள்






ஐம்பது காசு இருந்தால் போதும் அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டலாம் . அம்மா தர வேண்டுமே ! நேற்று தான் அப்பாவிடம் வாங்கினோம் ,அதற்கும் முந்தைய நாள் அத்தையிடம் ... இன்று யாரிடம் கேட்கலாம் ?!;


விஜயலுவின் மனம் பர பரவென்று யோசித்தவாறு சைக்கிள் கடை முன்பாகவே சுற்றிக் கொண்டிருந்தது .தினம் ஒரு ஐம்பது காசு கொடுத்தால் இவர்களென்ன குறைந்த போய்விடுவார்கள் ,நினைக்கும் போதே தன் நெஞ்சம் தன்னை சுட்டது ,காலை முதல் எத்தனை ஐம்பது காசுகள் வாங்கிச் செலவழித்தாகிவிட்டது ,இப்போது போய் கேட்டால் யார் தரப் போகிறார்கள் ?யோசிக்கும் போதே மஞ்சள் நிற பெயிண்ட் அடித்த அரை சைக்கிள் ஐ மோகனப் பிரியா எடுத்துக் கொண்டிருந்தாள் .


போன வாரம் வரை கேட்டால் ஒரு ரவுண்டு ஓட்ட தருவாள் தான் .இன்றைக்கு சைக்கிள் கடை முன்னால் விஜயலுவைப் பார்த்ததுமே கழுத்தை ஒரு வெட்டு வெட்டிக் காட்டி விட்டல்லவா குரோதத்துடன் போகிறாள் .


முந்தா நாள் சமூகவியல் வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும் போது ராமு வாத்தியார் எப்போதும் போல் கேள்வி கேட்டார் , பதில் தெரிந்தவர்கள் சொல்லி விட்டு தெரியாதவர்களின் முதுகில் குனிய வைத்து குத்துவது அந்த வகுப்பின் மரபு .அப்படித்தான் அன்று விஜயலு பதில் சொன்னதும் மோகனப் ப்ரியாவை குனிய வைத்து கொஞ்சம் பலமாக குத்தி விட்டாள்...அதிலிருந்து அவள் இவளுக்கு சைக்கிள் மட்டுமல்ல வேறு எதுவும் தர மாட்டேனென்று விட்டாள் ...


கொய்யாப் பழம் ...


பலாக்கொட்டை ...


மாம்பழக் கீத்து ...


நாவல் பழம் ...


இலந்தைப் பழம் ....


எதுவுமே தான் !


இவளிடம் போய் சைக்கிள் கேட்டு அவமானப் படுவதா ?


நிச்ச்சயம் அவள் சும்மா தொட்டுப் பார்க்கக் கூட விட மாட்டாள் ...கூட இருக்கும் அவள் கூட்டாளிகள் இருக்கிறார்களே பிசாசுகள் ...சரியான பேய்க்குட்டிகள்..!


சைக்கிள் வேண்டுமே ஓட்ட !இப்போது என்ன தான் செய்வது ?சைக்கிள் பைத்தியம் பிடித்து ஆட்டுதுடீ உன்ன ;அக்கா அடிக்கடி வீட்டில் மாட்டி விட ஆரம்பித்து விட்டாள் .


அம்மா அவளுக்கு காசா தராத சைக்கிள் கடைல தான் எந்நேரமும் கிடக்கா ...பேசாம சேவு ...சீனி முட்டாய் ...மரவள்ளிக் கிழங்கு எதாச்சும் வாங்கி குடு ...இல்லாட்டி சைக்கிள் ல அழுதுட்டு என்கிட்டே பங்கு கேட்பா ;அக்காவை அறையனும் போல இருக்கும் அந்நேரம் ;


அந்த ரோஸ் நிற நடுக்கம்பியிட்ட சைக்கிள் இருகிறதே அது தான் விஜயலுவின் செல்ல வண்டி .சைக்கிள் கடை பரமு அண்ணாச்சியிடம் எத்தனையோ தடவை அதை யாருக்கும் தராதிங்க அண்ணே என்று சொல்லி இருக்கிறாள் .அந்த நேரம் சரி சரி என்று போக்கு காட்டி விட்டு அடுத்த நொடியே யார் வந்து கேட்டாலும் காசுக்கு பேதமின்றி எல்லா சைக்கிள் லும் வாடகைக்குத் தருவார் சைக்கிள் கடை பரமு.


அந்த ரோஸ் நிற சைக்கிள் இன்று இன்னமும் யாரிடமும் போகவில்லை ...அதை எடுத்தே ஆகவேண்டும் என்று தான் பரபரப்பாய் யோசித்துக் கொண்டு இருந்தாள் விஜயலு ,சைக்கிள் லில் அப்படி என்ன தான் கண்டாலோ ?"ஆன்ட பிடகு ஏமிசே சைக்கிள் லு "அக்கா கத்துவாள் .


பஸ் ஸ்டாண்டில் தான் சைக்கிள் கடை ,


யாராவது சொந்தக்காரர்கள் வந்து அடுத்த பஸ்ஸில் இறங்க மாட்டார்களா காசு கிடைக்குமே சைக்கிள் விட !


சித்திக்கு என்ன கேடு பக்கத்து ஊர் தானே ? வந்தால் என்ன?


அத்தை மதுரையில் இருக்கிறாள் ...ஆனாலும் அவசரத்திற்கு வரலாம் ...வந்தால் என்ன கெட்டு விடும் ?


மாமா கோயம்பத்தூரில் இருந்தால் என்னவாம் இப்போது வந்து தொலைப்பதற்கு என்ன?


எங்கோ ஒழிந்து போய்விட்டார்கள் இந்த சொந்தக்காரர்கள் எல்லோரும் ஒரேநாளில் !!!


விஜயலுவுக்கு மெல்ல அழுகை வரப் பார்த்தது .சொந்தக்காரர்களை நினைத்ததெல்லாம் இல்லை .


அந்த ரோஸ் நிற கம்பி சைக்கிள் இருக்கிறதே அதை ஒரு பையன் ஸ்டாண்டை விட்டு வெளியே தள்ளிக் கொண்டு இருந்தான் .அது விஜயலுவின் செல்ல வண்டி ஆயிற்றே !!!யார் அந்தப் பையன் ?


ஊர் மந்தைப் வேப்ப மரப் பிள்ளையார் மீது எக்கச்சக்க கோபம் வந்தது ,ஆலமரம் இல்லாமல் வேப்ப மரத்தடியில் உட்கார்ந்திருக்கும் போதே உனக்கு இவ்வளவு குசும்பு இருந்தால் ... உனக்கு இனி தோப்புக்கரணமே போடபோவதில்லை .மனதிற்குள் கருவிக் கொண்டாள்.


போயும் போயும் அந்த கோனை வாய் கொண்டால் சாமிக்கா ரோஸ் சைக்கிள் போய் சேரனும் ?எல்லாம் உன்னால் தான் பிள்ளையார் !என் ரோஸ் சைக்கிள் போச்சே !!!அவன் போகிற போக்கில் இவளைப் பார்த்து நக்கலாய் சிரித்தமாதிரி இவளை நினைத்துக் கொண்டாள் .


சேச்சே ...இனி இந்த பரமு சைக்கிள் கடைக்கே வரவே கூடாது .ஊரில் வேறு சைக்கிள் கடையா இல்லை ?ஆமாம் வேறு இல்லையே ...ஒரே ஒரு கடை தானே ஊரில் !!!


தேவையே இல்லாமல் இதுவும் ஞாபகத்துக்கு வர இல்லாவிட்டால் போய்த்தொலையட்டும் .இனி பரமு கடை எந்த திசை என்று கூட மறந்து போகணும் பிள்ளையாரப்பா ...கண்களை இருக்க மூடி சிலுவைக்குறி இட்டுக் கொண்டு வேண்டி விட்டு வீட்டை பார்த்து ஓடினாள்,


படிப்பது பாதிரிமார் பள்ளிக்கூடம் ஆச்சே!!!சிலுவை இடாவிட்டால் பிள்ளையார் கோபித்துக் கொள்ளக்கூடுமே !!!


விஜயலு மெல்ல வீட்டுக்குள் எட்டிப் பார்த்தாள் அம்மா புறக்கடையில் பாத்திரம் தேய்க்கும் சத்தம் கேட்டது .அக்கா ஏழாம் வகுப்பு கூட்டு வட்டி கணக்குப் போட்டுக் கொண்டிருந்தாள் இவளுக்கு முதுகைக் காட்டியவாறு ;


இது தான் நல்ல சமயம் யாரும் கவனிக்கவில்லை இருட்டிக் கொண்டு வேறு வந்தது ..மழைக்காலம் ஆச்சே !!!சாயந்திரம் பெட்டிகடையில் வாங்கித் தின்ற கடலை உருண்டையும் அஞ்சு காசு அப்பளமும் என்னத்திற்கு ஆகும் ?


பசி எடுக்கத் தான் செய்தது ;"எங்க போய் ஊர் சுத்திட்டு வர ?" அம்மா முதுகில் சத்து சாத்தென்று சாத்துவாளே?!பூனை போல கூடம் தாண்டி எல்லோரும் படுக்கும் இடத்தில் விரிப்பு எதுவும் இன்றியே அந்த ரோஸ் நிற சைக்கிள் ஐ நினைத்துக் கொண்டே மெல்ல ...மெல்லத் தூங்கிப் போனால் விஜயலு .

0 comments:

Followers