தனிமையும் ருசியானதே !!!
தனிமை ருசியானதே !!!
சில நேரங்களில்
வெகு சிற்சில நேரங்களில்
என்றேனும் ஒருநாள்
ஒரே ஒரு நாள் மாத்திரம் ;
தனிமை ருசியானதே !
அடங்காத கோபம்
சீறி அடங்கும் போது
என் தவறுகளை ஆராய
தனிமை ருசியானதே !
எப்போதோ
என்றிருந்த மழை
மெதுவாய்த் துவங்கி
மிகக் கனமாய் கவிழ்ந்து
கொட்டி முழக்கும் போது
என் சுவாரஷ்யங்களை அசை போட
தனிமை ருசியானதே !
காலவரையின்றி காத்திருந்து
எதிர்பார்த்திருந்த
உன்னத வாய்ப்புகள்
போகட்டும் விடு என உதறித் தள்ளி
ஓய்ந்திருந்த
ஒரு மத்தியான பொழுதில்
அறிவிப்பின்றி
கதவைத் தட்டி உடைக்கும் போது ;
என் அதிர்ஷ்டத்தை
எனக்கு நானே
மெச்சி ரசிக்க
தனிமை ருசியானதே !
எண்ணற்ற இழப்பின் பின்னும்
என்னை நான் கண்டுணர
ஓயாமல் முயற்சிக்கும்
ஒவ்வொரு முறையும்
உடனிருந்து பற்றிக்கொள்ள
விரல்கள் தரும் எவ்வுயிரும் அருகின்றி
நட்ட நடுச் சாமத்தில்
சுவர்கோழி கத்தும்
அமானுஷ்ய வேளையிலே
திடுக்கிட்டு விழிக்கையிலே
சில்லென்று முகத்தை
உரசிப் பரவும்
இளங்காற்றை தடங்கலின்றி
அனுபவிக்க
என்றேனும்
ஒரு நாள்
ஒரே ஒரு நாள்
மாத்திரம்
தனிமை ருசியானதே !!!
கயல் கவிதைகள்
1 comments:
hi kayal..
Post a Comment